எது வரும் ? யார் வருவார்கள் ?

ஜனவரி 28, 2010


எது வரும் ? யார்  வருவார்கள் ?

வாழ்க்கையில்  நாம் பல நபர்களைப் பார்க்கிறோம்.
பணம்  சேர்ப்பது ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக்
கொண்டிருப்பார்கள்.பணம்  இருந்தால் மற்ற
எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பது
இவர்கள் எண்ணம்.

அல்லும்  பகலும்  அதற்காகவே
அலைந்து கொண்டு  இருப்பார்கள். இவர்களிடம்
எப்போதுமே  ஒரு வித பதட்டம் இருந்துகொண்டே
இருக்கும். வாழ்க்கை முழுதும்
அதற்காகவே  ஓடிக்கொண்டிருப்பார்கள்.

யோசித்துப் பாருங்கள். நமக்கு எது தேவை ?
நல்ல மனைவி, நல்ல குழந்தைகள்,
சிறந்த   நண்பர்கள்,
நல்ல ஆரோக்கியம்,அமைதியான,
நிம்மதியான வாழ்வு -  இவையே
வாழ்க்கைக்கு அவசியம்.

வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான்.
ஆனால் பணம் ஒன்றே  வாழ்க்கை ஆகி விடாது.
பணத்தால் வாங்க முடியாத  விஷயங்கள்
நிறைய உண்டு.மன நிம்மதியை  பணத்தைக் கொண்டு
வாங்க முடியுமா ?
கோடி ரூபாய் இருந்தாலும், சர்க்கரை வியாதி
உள்ளவர் நினைத்ததைச் சாப்பிட முடியுமா ?

செல்வத்தை சேர்ப்பது கடினம்.சேர்த்த செல்வத்தைப்
பாதுகாப்பதோ  அதைவிட  கடினம் -
எனவே நிம்மதியைக் கெடுக்கும்
செல்வத்தின் மீதான  பற்றை விட்டு விடு
-என்கிறார் ஆதிசங்கரர்.

மனைவியோ, பிள்ளைகளோ, சொந்தக்காரர்களோ -
நீ போகும்போது  யாரும் வரப்போவதில்லை -
நீ யாரையும்  அழைத்துச்செல்லப்போவதில்லை -எனவே
குடும்பத்தினர்  மீதான பற்றை விட்டு விடு என்கிறார்.

ஆனால்  யார்  கேட்கிறார்கள் ?
சங்கரருக்கென்ன – சந்நியாசி  தானே -
சுலபமாகச் சொல்லி விட்டுப் போய் விடுவார்.
அவருக்கு அது  சுலபம் !

ஆனால் -சொத்தையும், சம்சாரத்தையும்
கட்டிக்கொண்டு திண்டாடும்  நம்மைப் போன்ற
சராசரி  மனிதனின்  நிலை என்ன ?

மிகுந்த  பரபரப்பான,செல்வந்தரான வியாபாரி  ஒருவர்
அடிக்கடி தனக்குப் பிடித்த ஆன்மிகவாதியான குரு
ஒருவரிடம் செல்வது வழக்கம்.

அவர் சார்ந்த மடத்திற்கு
நிறைய  நிதிஉதவியும் அளிப்பதும் வழக்கம்.
ஒரு நாள்  அவர் தன் குருவிடம் கேட்டாராம் -”நான்
இவ்வளவு  பணம் சம்பாதிக்கிறேன். இருந்தும் எனக்கு
நிம்மதியோ, சநதோஷமோ  இல்லை.
எப்போதும்  பதட்டமாகவே  இருக்கிறது. எனக்கு நிம்மதி
ஏற்பட ஒரு வழி சொல்லுங்கள்”  என்று.

அதற்கு பதில் அளித்த குரு,”பற்றை விட்டால் நிம்மதி
தானாகவே  வரும்.  நீ பணத்தின் மீதும்,
குடும்பத்தினர் மீதும் உள்ள பற்றை முதலில் விடு”
என்றார்.

அந்த செல்வந்தர்”என்னிடம் பணம் சேர்ந்து விட்டது.
எனவே பணத்திற்காக  அலைவதை வேண்டுமானால்
நிறுத்தி விடலாம்.
ஆனால் என் குடும்பத்தினருக்கு என் மீது அளவில்லாத
பாசம். கொள்ளை அன்பு. நான் இல்லாமல் அவர்களால்
அரைக்கணம்  கூட இருக்க முடியாது.அப்படிப்பட்டவர்களை
என்னால் எப்படி ஒதுக்க முடியும்” என்றார்.

அதை பரிசோதித்துப் பார்த்து விடலாமா என்றார் குரு.
ஒத்துக்கொண்டார்  செல்வந்தர். சவம் போல் அசைவின்றிக்
கிடக்கும் யோக வித்தை ஒன்றை அவருக்குச் சொல்லிக்
கொடுத்த  குரு வீட்டிற்குச் சென்று அதைப் பிரயோகிக்கச்
சொன்னார்.

அதே போல் செல்வந்தரும் வீடு சென்று இறந்தது போல்
யோகாசனத்தில் படுத்துக் கிடந்தார்.
மனைவி, பிள்ளைகள், உறவினர் யாவரும் அவர் இறந்து
விட்டதாகவே எண்ணி  கதறி அழுதனர். அப்போது,
குருவும் செல்வந்தரின் வீட்டிற்குச் சென்றார்.

அவர்களிடம் சொன்னார்.  “உங்களில்  யாராவது ஒருவர்
உயிரைத்  தர  முன் வந்தால் போதும்.இப்போதும் இவரைப்
பிழைக்க வைக்க என்னால் முடியும்” என்று.

அதுவரை  கதறி அழுதுக்கொண்டிருந்தவர்கள்
ஒவ்வொருவராக பின் வாங்கத்தொடங்கினார்கள்.
ஒவ்வொருவரும் தான் தொடர்ந்து உயிர் வாழ வேண்டியதன்
அவசியத்தைச் சொல்லி நகர ஆரம்பித்தார்கள்.

கடைசியாக எஞ்சியது செல்வந்தரது  மனைவி மட்டுமே.
அந்த மனைவியோ “அவருக்காக  யாரும் உயிர்
விட வேண்டாம். நாங்கள்  அவர் இல்லாமலே
வாழப் பழகிக் கொள்கிறோம்” என்றாள் !

அதுவும் உண்மை தானே ! நம் வாழ்க்கை யாரோடும்
முடிந்து போவதில்லை. முடிந்து விடும் என்று
போலியாக நம்பி நம்மை நாமே  ஏமாற்றிக்
கொண்டிருக்கிறோம் !

என் பாட்டி (அப்பாவின் அம்மா )16 வயதில் கணவனை
(என் தாத்தாவை )இழந்தார். அப்போது என் தந்தைக்கு
ஒரு வயது. அதன் பிறகு 77 வயது வரை பாட்டி உயிர்
வாழ்ந்தார்.61 வருடங்கள் வெள்ளைத்துணி உடுத்தி
கைம்பெண்ணாகவே  வாழ்ந்தார்.

மிகுந்த பாசத்துடனும், ஆசையுடனும் வளர்த்த
என் மகளை, அவளது இளம் பிராயத்தில், சரியாக
16 வயதில் திடீரென்று ஒரு நாள் பறி கொடுக்க நேர்ந்தது.
வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தான் எண்ணினேன்
நான்.நாமும் செத்து விடலாமா என்று கூடத்தோன்றியது.
ஆனால்  இன்னும் ஒரு மகள் இருந்தாள் – மனைவி
இருந்தாள். அப்போது அவர்களுக்காக
வாழ் வேண்டி இருந்தது.பின்னர் எனக்காகவும் வாழ
வேண்டி இருந்தது !

வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்ட பிறகு தோன்றுகிறது.
யாரோடும் – யார் வாழ்க்கையும் முடிந்து போய்
விடுவதில்லை.  அதெல்லாம் அப்போதைக்கான
ஒரு பிரமை. அவரவர்  வாழ்க்கையை அவரவர்
வாழ்ந்தேயாக வேண்டி இருக்கிறது !

இது தான் வாழ்க்கை.நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை.
கூட  வரப்போவதும்  எதுவுமில்லை.  எனவே
எதன் மீதும் அளவு கடந்த  பற்று கொண்டு நிம்மதியை
இழக்க வேண்டாம்  என்பதே  சங்கரர் கூறுவது.

இதையே தான் வள்ளுவரும் சொன்னார் -
“பற்றுக  பற்றற்றான் பற்றினை – அப்பற்றினைப்
பற்றுக  பற்று   விடற்கு “  -   என்று.

சங்கரர்  கூறும்  அளவிற்கு சுத்தமாகப் பற்றை விட
இயலா விட்டாலும்,
நடைமுறையில், இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு வழியை
கடைப்பிடிப்பது – முயன்றால்  சாத்தியமே.

குடும்பத்தை – மனைவியை, குழந்தைகளை,
பெற்றோர்களைப் பாதுகாப்பதும்,  பராமரிப்பதும்
நம்  கடமையே.  அதிலிருந்து நாம்
எங்கும் தப்பி ஓட முடியாது. அது நெறியும் ஆகாது.
எனவே – அதன் பொருட்டு
செல்வத்தை ஈட்டுவதும்  அவசியமாகிறது.

ஆனால் – பணத்தின் பின்னாலேயே  அலைவதையும்,
அதற்காக  எதையும் செய்யத் துணிவதையும்,
யார் மீதும்  அளவுகடந்த பற்று வைப்பதையும்,
சொந்தம்  கொண்டாடுவதையும் -
முயன்றால் தவிர்க்கலாம்.

எதுவும்  நிரந்தரமில்லை, யாரும் நிரந்தரமில்லை -
என்கிற  உண்மையை  எப்போதும்
மனதில் ஒரு மூலையில்  இருத்திக்கொள்ள
முயற்சித்தால் -

இன்ப துன்பங்களை  ஓரளவிற்கு
சம நிலையில் எதிர்நோக்கும் பக்குவத்தைப்
பழக்கிக் கொண்டால் -வரும் துன்பங்களிலிருந்து
ஓரளவு  விடுபடலாம்.

இதைத்  தான்  நானும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

என்  அனுபவத்தை உங்களிடமும்   பகிர்ந்து

கொள்கிறேன்.

ஆனந்த வாழ்வுக்கு இது ஒரு அடிப்படை-
இது  ஒரு  ஆரம்பம் !


தேவைக்கு மேல் ………

ஜனவரி 19, 2010


தேவைக்கு மேல் ….

ஒருவர்  நிம்மதியாக வாழ அத்தியாவசியமான
தேவைகள் எவை ?

இருக்க இடம், உடுக்க துணி, பசிக்கு உணவு.
இதற்கு மேல் கல்வி, மருத்துவம் போன்ற
குடும்பத்தினரின் அவசிய செலவீனங்களைச் சந்திக்க
தேவையான  அளவு பணம்.

ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு
இதற்காக  மாதம் எவ்வளவு  தேவைப்படும் ?

சிக்கனமான குடும்பம் என்றால் 15,000 ரூபாய் போதும்.
சிறிது தாராளமாக இருந்து பழக்கப்பட்டவர்கள் என்றால் -
ரூபாய்  20,000 போதுமானது.

இன்னும் சிறிது வசதியாகவும், சௌகரியமாகவும் வாழ
வேண்டும் என்றால் – ரூபாய் 30,000  தாராளம்.

கார், பங்களா  என்று  மிகவும் வசதியாக வாழும்
குடும்பம்  என்றால்,  மாதம் ரூபாய் ஒரு லட்சம்
இருந்தால்  தாராளம் – தாராளம்.

எப்படிப்பட்ட வசதியான குடும்பம் என்றாலும்,  மாதம்
ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்ய நியாயமான
காரணங்கள்  எதுவும் யாருக்கும் இல்லை.

“ஊருணி நீர்  நிறைந்தற்றே உலகுஅவாம்
பேரறிவாளன்  திரு ” என்றார் வள்ளுவர்.

அதாவது அறிவும் கருணையும்  நிறைந்த ஒரு மனிதரிடம்
சேரும் செல்வம் – ஊருக்குப் பொதுவாக இருக்கும்
குடிநீர்க் குளத்தில் சேரும் தண்ணீரைப்போல்  அனைவருக்கும்
உதவியாக இருக்கும் என்றார்.

“மனிதன் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை -
அதே போல் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப்
போவதில்லை.உன்னிடம் இருக்கும் செல்வம்  அனைத்தும்
இடையில் வந்தது. இன்று உன்னிடம் இருக்கும் செல்வம் -
நாளை வேறு  யாரிடமோ போகப்போகிறது.

நீ இறக்கும்போது உன் மனைவியோ, பிள்ளைகளோ,
நண்பர்களோ,  உறவினர்களோ – யாரும் உன்னுடன்
வரப்போவதில்லை. நீ அழைத்தாலும்  யாரும்
கூட வரத்தயாராக  இல்லை.

-  எனவே உனக்கு நிரந்தரமாக்ச் சொந்தம் இல்லாத
இவற்றின் மீதுள்ள பற்றினை அறுத்து  எறி “-

என்கிறார் பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்.

செல்வத்தைப் பெற்றுள்ள  எவரும்  அதற்கு சொந்தக்
காரர்கள்  அல்ல – அவர்கள்  பாதுகாவலர்கள் மட்டுமே
என்கிறது  கீதை. கோவில் அறங்காவலர்கள்  எப்படி
கோவிலையும் அதன் சொத்துக்களையும்  பராமரித்து
அவற்றை  முறையாகச் செலவு செய்கிறார்களோ
அது போல் செல்வந்தர்கள்  தங்களிடம் உள்ள செல்வத்தை
நல்ல முறையில் பராமரித்து  மற்றவர்களுக்காகப்
பயன்படுத்த வேண்டும் என்கிறது கீதை.

மேலே  சொல்லியதுபோல்  மிக மிகச் சிக்கனமாக
குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்வதாக இருந்தாலும்
ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 15,000 அவசியம்
என்கிற நிலையில் -

மாதம் 2000 ரூபாய்  கூட
சம்பாதிக்க வழி இல்லாமல் – நாயாய்,பேயாய் அலையும்,
அல்லல்படும் மனிதர்கள்  எவ்வளவு பேரை
அன்றாடம் பார்க்கிறோம் !

இருக்க இடம் இன்றி, நடைபாதையில் வசிக்கும்
குடும்பங்கள்  எத்தனை எத்தனை ?
ஒரு வேளைக் கஞ்சிக்கும்  ஆலாய்ப் பறக்கும்
குடும்பங்கள் எத்தனை ?

பள்ளிக்கூடம் செல்லாமல் பிளாட்பாரத்தில் அலையும்
சிறுவர்கள், டீ கடைகளில், மளிகைக் கடைகளில்,
காய்கறிக் கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள்
எத்தனை பேரைக் காண்கிறோம் ?

ஓடும் ரெயில்களில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும்
கண்பார்வை இல்லாத மனிதர்கள் எவ்வளவு பேரைப்
பார்க்கிறோம் ?

பகல் முழுதும் பிச்சை எடுத்து, இரவு நேரங்களில்
ரெயில்வே ஸ்டேஷன்களின் மேம்பாலங்களில்
படுத்துறங்கும் ஆதரவற்ற அநாதை முதியவர்கள்
எத்தனை பேர்களைப் பார்க்கிறோம்.

மன நலம் குன்றி, கவனித்துக் கொள்ள ஆளின்றி
தெருவில் அலையும் பாவப்பட்ட ஜென்மங்கள் எத்தனை
பேரைப் பார்க்கிறோம் ?

இவர்களைப்  பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு – நமக்கு,
இந்த சமுதாயத்திற்கு இல்லையா ? முக்கியமாக
மாதம்  லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள
பெரிய மனிதர்களுக்கு இல்லையா ?

“வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன்”
- என்றார் வள்ளலார். பயிர்கள்  வாடுவதைக்கூட
காணப்பொறுக்காத வள்ளலார் அளவுக்கு  இல்லா
விட்டாலும்,இத்தனை  அவலங்களையும் பார்த்துக்கொண்டு,
மனச்சாட்சி உள்ள  மனிதர்கள்  சும்மா இருக்கலாமா ?

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த
ஜெகத்தினை அழித்திடுவோம் ” என்றார்  பாரதி.
இதனையே  சற்று  மாற்றிச்சொன்னார்  கார்ல் மார்க்ஸ்.

அத்தகைய  அழிவு  ஏற்படாமல் தடுக்க நாம் முயற்சி
எடுக்க வேண்டாமா ?

தரமான இலவசக் கல்வியை அளிக்கும் பள்ளிக்கூடங்கள்
மிகுந்த எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழைச்சிறுவர், சிறுமிகள் தங்கி, உண்டு, படிக்க
தரமான இலவச  தங்கும் விடுதிகள் பல -தேவைப்படும்
இடங்களில் எல்லாம் கட்டப்பட வேண்டும்.

நல்ல மருத்துவ உதவியை அளிக்கக்கூடிய இலவச
மருத்துவமனைகள்  உருவாக்கப்பட்டு ஏழை நோயாளிகளை
நன்கு பராமரிக்க வேண்டும்.

ஆதரவற்ற முதியோர்களையும், பெண்களையும்,
குழந்தகளையும் பாதுகாக்க  ஆதரவற்றோர் இல்லங்கள்
உருவாக்கப்பட வேண்டும்.

தெருவில் அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை
தங்கவைத்து தக்க சிகிச்சை அளிக்க தகுந்த
மனநோயாளிகள் இல்லங்கள்  மாவட்டம்தோறும்
உருவாக்கப்பட வேண்டும்.

தொழில் பயிற்சி  அளிக்கக்கூடிய தொழில்கூடங்களை
உருவாக்கி, வேலையற்ற, உழைக்கும் தகுதியுள்ள
நபர்களுக்கு பயிற்சி அளித்து அவர்க்ளுக்கான
வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இவை அனைத்தும் இந்த சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பு.
யாரிடம் அதிகப் பணம் இருக்கிறதோ -
யாரிடம்  செல்வம் குவிந்திருக்கிறதோ -அவர்கள்
தாமாகவே  இத்தகைய சமுதாயக் கடமைகளை
நிறைவேற்ற முன் வர வேண்டும்.

வருவார்களா ?

வரவில்லை என்றால் -அவர்களைச் செய்ய வைக்கவேண்டிய
பொறுப்பு   நமக்கு இருக்கிறது அல்லவா ?

என்ன  செய்யப்போகிறோம் ?